Thursday, July 11, 2019


அசோலா மற்றும் ஊறுகாய் புல் - வறட்சி கால  நிவாரணம்   

ரா. கோபி மற்றும் அ. கோபி
உழவர் பயிற்சி மையம், ஏனாத்தூர், காஞ்சிபுரம் – 631 561
காட்சி - 1
இடம்: மாகறல் கால்நடை மருத்துவமனை, காஞ்சிபுரம்.
பங்கு பெறுவோர் : ராமசாமி, முருகன், விவசாயிகள் சங்க குழுவினர் மற்றும் மாகறல் கால்நடை உதவி மருத்துவர்.
ராமசாமி               :  வணக்கம் அய்யா
முருகன்                 :  வணக்கம் அய்யா...எப்படி இருக்கீங்க...
கா.உ. மருத்துவர் : வணக்கம் ராமசாமி. வாப்பா முருகா. நல்லா இருக்கேன். நீங்கலாம் எப்படி இருக்கீங்க. முதல்ல எல்லோரும் உட்காருங்க உங்க ஆடு, மாடுங்கல்லாம் எப்படிப்பா  இருக்குங்க.
ராமசாமி            : ரொம்ப நன்றிங்கய்யா. நல்லா இருக்குங்க அய்யா. ஒரு சில சந்தேகம்ங்க. அதான் உங்கள பார்த்து கேட்டுட்டு போலாம்னு வந்தோம்ங்கய்யா.
கா.உ. மருத்துவர் :  ம். சொல்லுப்பா என்ன சந்தேகம் ? என்ன வேணும் ??
ராமசாமி           : அய்யா நம்ம முருகன் மொபைல்ல வாட்சப்ல்ல ஏதோ அசோலா மற்றும் ஊறுகாய் புல் அப்படின்னு வந்துதாம். நீங்கதான் வாட்சப்ல்ல வருகின்ற கால்நடைகள் சம்மந்தப்பட்ட தகவல்களை கால்நடை மருத்துவரை ஆலோசிக்காமல் பயன்படுத்தக் கூடாதுன்னு கொஞ்ச நாள் முன்னாடி என்கிட்ட சொன்னிங்க. அதாங்க அய்யா உங்ககிட்ட அசோலா மற்றும் ஊறுகாய் புல் பத்தி விளக்கமாக் கேட்டுட்டு போலாம்னு வந்தோம்.
கா.உ. மருத்துவர்  : ரொம்ப நல்லதுப்பா. சரிப்பா முதல்ல நாம அசோலா பத்தி பேசலாம்.
முருகன்                 : சரிங்கய்யா கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க
கா.உ. மருத்துவர்: அசோலா அப்படின்றது பெரணி வகையைச் சார்ந்த நீரில் மிதக்கும் தாவரமாகும். இத்தாவரத்தை மூக்குத்திச்  செடி அப்படின்னு நம்ம ஊருல சொல்வாங்க
ராமசாமி               : அதென்னங்கய்யா மூக்குத்திச்செடி ???
கா.உ. மருத்துவர் : இந்தச் செடியோட இலைகள் பார்ப்பதற்கு மூக்குத்தி மாதிரி மிகச்சிறிய அளவில பக்கவாட்டுல முக்கோண வடிவில் ஒன்றின் மேல் ஒன்று எதிர் வரிசையில அடுக்கின மாதிரி இருக்கும். நீர்நிலை முழுவதும் பச்சைப்பசேல்னு பச்சைக் கம்பளம் விரித்த மாதிரி இருக்கும் ராமசாமி.
முருகன்                 : இந்த அசோலா தாவரத்தோட பயன்கள் என்னங்கய்யா ????
கா.உ. மருத்துவர்  : இந்த அசோலா தாவரத்தில் புரதச்சத்து 25-30 சதவீத அளவிலும், நார்ச்சத்து 14-15 சதவீத அளவிலும், கொழுப்புச்சத்து 3-4 சதவீத அளவிலும், சாம்பல்ச்சத்து 15-20 சதவீத அளவிலும் இருக்கும். இதுமட்டுமில்லாம கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மணிச்சத்து மற்றும் சுண்ணாம்புச் சத்துக்களும் இருக்குதுப்பா முருகா. ஒவ்வொரு 24 மணி நேரத்திற்கு ஒரு முறையும் அசோலா இருமடங்காக வளரும் திறனுள்ள தாவரம். ஒரு ஹெக்டர் நிலப்பரப்பில் 250-300 டன் அசோலாவை ஒரு வருடத்திற்கு உற்பத்தி செய்யலாம். அதுமட்டுமில்லாம அசோலாவில் லிக்னின் அப்படின்ற பொருள் குறைவா இருக்கிறதால நம்ம கால்நடைகள் எளிதில் சீரணித்து விடுங்க. அசோலாவை நெல் வயல்களில் நீர் ஆவியாவதை தடுப்பதற்கும், காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தவும் பயன்படுத்தலாம். அதாவது ஒரு நாளைக்கு ஒரு ஹெக்டருக்கு 4 கிலோ தழைச்சத்தை நிலைநிறுத்தப் பயன்படுத்தலாம் முருகா. ஆடு, மாடு, கோழி போன்ற நம் கால்நடைகளுக்கும் அசோலாவை நன்கு அளிக்கலாம்.

முருகன்      நம்ம கால்நடைகளுக்கு எந்த அளவுலங்கய்யா கொடுக்கிறது, பலன் கொடுக்கும்ங்களா?
கா.உ. மருத்துவர்  : அசோலாவை பசுந்தீவனமாகவோ, இல்ல காய வைத்து உலர் தீவனமாகவோ பயன்படுத்தலாம். கறவை மாடுகளுக்கு 1 - 1.50 கிலோ அளவிலும், ஆடுகளுக்கு 300 கிராம் அளவிலும், கோழிகளுக்கு 25-30 கிராம் என்ற அளவிலும் கொடுக்கலாம். அசோலாவை மாடுகளுக்கு தொடர்ந்து கொடுத்து வந்தோம்னா 15-20 சதவீத பால் உற்பத்தியை அதிகரிக்கலாம். கோழிகளுக்கு கொடுக்கும்போது அசோலாவில் உள்ள பீட்டா கரோட்டினால் முட்டையின் எடை சற்று கூடியும், மஞ்சள் கருவானது சற்று அடர்த்தியாகவும் இருக்கும்பா குமாரு. ஒரு கிலோ அசோலாவானது ஒரு கிலோ பிண்ணாக்கில் உள்ள சத்துப் பொருட்களுக்கு சமம் ராமசாமி. ஒரு கிலோ பிண்ணாக்கின் விலை சராசரியா 45 - 55 ரூபாய். ஆனா ஒரு கிலோ அசோலாவை உற்பத்தி செய்ய 50 முதல் 75 பைசா மட்டுமே செலவாகும். அப்படின்னா அசோலாவோட முக்கியத்துவத்தை புரிஞ்சிக்காங்கப்பா.
ராமசாமி               : புரியுதுங்கய்யா...அப்படிப்பட்ட அசோலாவை எப்படிங்கய்யா வளர்க்கிறது ?
கா.உ. மருத்துவர்  : சரி வா ராமசாமி. நம்ம கீழ்பேரமநல்லூரில் இருக்கிற குமரேசன் தோட்டத்துல அசோலாவை உற்பத்தி செஞ்சிருக்கோம். வாங்க நாம அவர் தோட்டத்துக்கு போய் அசோலாவை நேரில் பார்த்துக்கொண்டே பேசலாம்.
ராமசாமி               : சரிங்க அய்யா.
காட்சி - 2
இடம்: குமரேசன் தோட்டம், கீழ்பேரமநல்லூர்.
பங்கு பெறுவோர் : குமரேசன், ராமசாமி, முருகன், விவசாயிகள் சங்க குழுவினர் மற்றும் மாகறல் கால்நடை உதவி மருத்துவர்.

குமரேசன்             : சார் வணக்கம். எப்படி இருக்கீங்க.
கா.உ. மருத்துவர் : வணக்கம்பா குமரேசா. நல்லா இருக்கேன். நம்ம அசோலா இருக்கிற தொட்டிய பார்க்கலாம்னு வந்தோம்.
குமரேசன்             : வாங்க சார் பார்க்கலாம்.
கா.உ. மருத்துவர்  : ராமசாமி அசோலாவை நெல் வயல்களிலோ, சிமெண்ட் தொட்டியிலோ, இல்ல நம்ம குமரேசன் மாதிரி குழியிலியோ நாம வளர்க்கலாம். முதல்ல 6 ஆடி நீளமும், 3 அடி அகலமும், 1 அடி ஆழமும் இருக்கிறமாதிரி ஒரு பள்ளம் தோண்டிட்டு, அப்புறமா அந்த பள்ளத்தின் மேல சிலிப்பாலின் ஷீட்டையோ அல்லது வீட்டில் உபயோகமில்லாமல் இருக்கிற பேனரைக் கூட குழியின் மேல் போடலாம். பின்னர் செங்கற்களை குழியைச் சுற்றி வைக்கணும்பா. அப்புறமா அது மேல 30 கிலோ செம்மண்ணை சீராக போட்டு  விட்டுட்டு, 3 கிலோ சாணத்தை கரைத்து ஊற்றணும். கடைசியா, 10 சென்டிமீட்டர் அளவு தண்ணீர் வரும் வரை 8-10 குடம் தண்ணீரை குழியில் ஊற்றி, 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை குழியில் போடணும். ஒரு நாள் முழுவதும், அதாவது மண் மற்றும் சாணம் சூடு தணியும் வரை அசோலாவை தொட்டியில் போடக் கூடாது. உடனடியா தொட்டியில் அசோலாவை போட்டால், சில சமயங்கள்ள மண் மற்றும் சாணத்தின் சூடு தாங்காம அசோலா காய்ந்து போய்டும். ஒரு நாள் கழித்து, ஒரு கிலோ அசோலாவை குழியில் இட்டு, அது மேல கொஞ்சம் தண்ணீரைத் தெளித்து விடணும் முருகா. இரண்டு வாரம் கழிச்சு பார்த்தோம்னா அசோலா நன்றாக வளர்ந்திருக்கும். அந்த குழியிலிருந்து நாம தினமும் ஒரு கிலோ வரை அசோலாவை அறுவடை பண்ணலாம்.
நெல் வயல்ல வளர்க்கணும்னா, 5 சென்டிமீட்டர் அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ள 1 செண்ட் நெல் வயல்ல 5 கிலோ அசோலாவை தூவினா இரு வாரங்கள்ல அந்த பகுதி முழுசா அசோலா வளர்ந்திடும்.
முருகன்    : அப்படின்னா நான் நாளையே மொட்டை மாடியில அசோலாவை வளர்கிறேனுங்கய்யா...
கா.உ. மருத்துவர்  : முருகா முதலுக்கே மோசமாகிடும்பா . அசோலா பராமரிப்பில இன்னும் சில முறைகள் இருக்கு. அதையும் கேட்டுட்டு பண்ணுப்பா
முருகன்                 : மன்னிச்சிடுங்கய்யா சொல்லுங்க.
கா.உ. மருத்துவர்  : அசோலாவை அதிக வெப்பமில்லாத, சூரிய ஒளி நேரடியாக படாத நிழலான இடமாக பார்த்து வளர்க்கணும். மர  நிழலில் அசோலாவை வளர்க்கலாம். கோடை காலங்கள்ல வெயிலோட தாக்கம் அடிக்காம பார்த்துக்கணும். நேரடியா சூரிய ஒளி அசோலா மேல பட்டுச்சுன்னா அசோலா கருகிடும்பா. அதனால நிழல் வலைகளை அசோலா தொட்டி மேல கட்டி விடலாம். அசோலாவை ஆடு மாடுகளுக்கு கொடுப்பதற்கு முன்னாடி சாணம் மணம் அடிக்காமல் இருக்க நன்கு சுத்தம் செய்துடணும். மழைக்காலங்கள்ல சற்று சூரிய ஒளியில் உலர்த்தி கொடுக்கலாம். தினமும் வளர்ந்த அசோலாவை அறுவடை செய்திடணும். 10 நாட்களுக்கு ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு தண்ணீரை மாற்றணும். வாரம் ஒரு முறை 2 கிலோ சாணத்தையும் 10 கிராம் கிராம் சூப்பர் பாஸ்பேட்டை குழியில் போடணும். மாதம் ஒரு முறை மூன்றில் ஒரு பங்கு மண்ணை மாற்றணும். முருகா நல்லா ஞாபகம் வச்சுக்கப்பா. ஒரு நாள் முழுவதும், அதாவது மண் மற்றும் சாணம் சூடு தணியும் வரை அசோலா தொட்டியில் போடக் கூடாது. மண் மற்றும் சாணத்தை மற்றொரு குழியில் ஊற வைத்து பின்னர் தான், நம் அசோலா குழிக்குள் அவற்றை போட வேண்டும். அசோலாவில் புரதச்சத்து அதிகம் உள்ளதால் அசோலாவை கால்நடைகளுக்கு அளிப்பதால் நாம தீவனச்  செலவை குறைக்கலாம் முருகா.
முருகன்         : ரொம்ப நன்றிங்கய்யா. ஊறுகாய் புல் உற்பத்தி பத்தி கொஞ்சம் சொல்லுங்கய்யா...
கா.உ. மருத்துவர்  : நம்ம ஊரில கால்நடைகளுக்கான பசுந்தீவன உற்பத்தி மழைக்காலங்கள்ள  அதிகமாகவும், கோடை காலம் மற்றும் வறட்சி காலங்கள்ள  மிகவும் குறைவாகவும் இருக்குது முருகா. வறட்சி காலங்கள்ல நாம எப்பொழுதும் சோளத்தட்டை, வைக்கோல், உலர வைத்த கடலைச்செடி போன்றவைகளைத்தான் கொடுப்போம். இந்த தீவனங்களில் கால்நடைகளுக்கு போதுமான சத்துப் பொருட்கள் குறைவாக உள்ளதால், மாடுகளின் வளர்ச்சியும், சினைப்பிடிக்கும் திறனும் வெகுவாக குறையும். தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால நம்மால வேலிமசால், முயல்மசால் மற்றும் தட்டைப்பயறு போன்ற புரதம் அதிகமாக உள்ள பயறு வகைகளையும் கால்நடைகளுக்கு உற்பத்தி செய்து கொடுக்க முடியுறதில்ல. இந்த மாதிரி வறட்சி காலங்களில், குறிப்பா நம்ம கறவை மாடுகளுக்கு சரியான அளவில் பசுந்தீவனம் அளிக்காம போனோம்னா, மாடுகளோட பால் உற்பத்தி மற்றும் சினைப் பிடிக்கும் திறன் குறையும். அதனால உங்கள போன்ற ஆர்வமான விவசாயிங்க அசோலா மற்றும் ஊறுகாய் புல் போன்றவைகளை உற்பத்தி செய்து வறட்சி காலத்தை சமாளிக்கலாம்.
குமரேசன்                : புரியுதுங்கய்யா ?? அதென்னங்கய்யா ஊறுகாய் புல் ?
கா.உ. மருத்துவர்  : குமரேசா மழைக்காலத்தில அதிகமாகக் கிடைக்கும் பசுந்தீவனத்தை அதன் தன்மை மாறாம, குறைந்த அளவு ஊட்டச்சத்து இழப்போட பதப்படுத்தும் முறைதான்  சைலேஜ் அப்படின்ற ஊறுகாய் புல் தயாரிப்பு முறை.
ராமசாமி                 : சரிங்கய்யா. ஊறுகாய் புல் எப்படிங்கய்யா தயாரிக்கிறது ?
கா.உ. மருத்துவர்  : ராமசாமி, மக்காச்சோளம், சோளம் மற்றும் ஓட்ஸ் போன்ற தானிய வகைத் தீவனப்பயிர்களைப் பூ பூக்கும் தருணத்திலும், கம்பு நேப்பியர் போன்ற ஒட்டுப் புல் வகைத் தீவனப்பயிர்களை 1.25 மீட்டர் வளர்ந்த பின்பு அறுவடை செய்தும் ஊறுகாய் புல் தயாரிப்பிற்குப் பயன்படுத்தலாம். சைலேஜ் தயாரிக்கத் தேவைப்படும் குழியை சைலோ குழி அப்படின்னு சொல்வாங்க.
சைலோ குழியைத் தண்ணீர் தேங்காத மேடான நிலப்பரப்பில் அமைக்கணும். 1 மீட்டர் நீளம் * 1 மீட்டர் அகலம் * 1 மீட்டர் ஆழம் அளவுள்ள சைலோ குழியில் 500 - 600 கிலோ அளவுள்ள பசுந்தீவனங்களை நாம பதப்படுத்தலாம். சரியான தருணத்தில அறுவடை செய்யப்பட்ட தீவனப்பயிர்களை 2 முதல் 3 மணி நேரம் அதாவது, 65-70 சதவீதம் அளவில் ஈரப்பதம் வரும் வகையில் சூரிய ஒளியில் நல்லா உலர வைத்து, அப்புறமா சிறு சிறு துண்டுகளாக (2-3 சென்டிமீட்டர்) நன்கு வெட்டணும் ராமசாமி. சைலோ குழியில் முதல்ல  5 சென்டிமீட்டர் அளவுக்கு வைக்கோலை பரப்பிட்டு, அப்புறமா நறுக்கப்பட்ட தீவனப் பயிர்களை 100 கிலோ அளவில் சைலோ குழியில் இட வேண்டும். பின்னர் நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். பிறகு, அதன் மேல் 2 கிலோ வெல்லப்பாகு மற்றும் 1 கிலோ உப்புக்கரைசலை பசுந்தீவனத்தின் மேல் தெளித்து விடணும். அப்புறம் மீண்டும் 100 கிலோ பசுந்தீவனம் மற்றும் வெல்லப்பாகு, உப்புக்கரைசலை அதன் மேல் தெளிக்க வேண்டும். பின்னர் நன்கு அழுத்தி இடையே உள்ள காற்றை வெளியேற்ற வேண்டும். சைலோ குழியானது தரை மட்டத்திலிருந்து 1 - 1.5 மீட்டர் உயரம்   வரும் வரை தீவனப்பயிர்களை அடுக்கணும். இதே போல் 500 கிலோ பசுந்தீவனத்தையும்  முழுமையாக அடுக்கிய பின்னர், இறுதியாக 5 சென்டிமீட்டர் அளவிற்கு வைக்கோலை  வைத்துட்டு,  அதன் மேல ஈர மண்ணை வைத்து காற்று புகாமல்  45-60 நாட்கள் மூடி வைத்து நல்ல தரமான ஊறுகாய் புல்லைத்  தயாரிக்கலாம். நல்ல தரமான ஊறுகாய் புல்லானது பழ வாசனையுடன், பொன் மஞ்சள் நிறத்தில, 3.5 - 4.2 என்ற அளவில் அமிலத்தன்மையுடனும் இருக்கும் ராமசாமி.
முருகன்                 : கால்நடைகளுக்கு எவ்வளவு ஊறுகாய் புல்லை கொடுக்கலாம்ங்கய்யா?
கா.உ. மருத்துவர்  : கறவை மாடுகளுக்கு ஊறுகாய் புல்லை முதலில் 5 கிலோ அளவில் கொடுத்துப் பழக்கப்படுத்திய பின்னர், அதிகபட்சமாக 20 கிலோ வரை அளிக்கலாம். ஆடுகளுக்கு 1 கிலோ வரை ஊறுகாய் புல்லைக் கொடுக்கலாம்.
முருகன்                 :  ரொம்ப நன்றிங்கய்யா...
ராமசாமி               : ரொம்ப நன்றிங்கய்யா... அப்ப நாங்க போயிட்டு வறோம்ங்கய்யா...
கா.உ. மருத்துவர்  : ரொம்ப அருமை ராமசாமி. வாட்சப், யுடியூப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளத்துல உலா வருகின்ற கால்நடை சம்மந்தப்பட்ட தகவல்களை மருத்துவரோட ஆலோசனைகளை கேட்டுட்டு, அப்புறமா பயன்படுத்தணும் அப்படினு நினைச்சுதுக்கே உங்களை பாராட்டணும். முருகா நீயும் ராமசாமி மாதிரி கத்துக்கப்பா...ஆடு மாடுகளை நல்லா வளர்த்துங்கப்பா... ஏதாவது சந்தேகம்னா வாங்கப்பா... போயிட்டு வாங்க.


கால்நடைக் கதிர் (2019). 39(3), 31-38

Friday, June 14, 2019


ஆடுகளுக்கு மருந்துக் குளியல் - ஒரு உரையாடல்


ரா.கோபி, ந.விமல் ராஜ்குமார், பெரு.மதியழகன் மற்றும் பொ.திலகர்
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-7.

காட்சி – 1
இடம்: குமாரின் ஆட்டுப் பண்ணை அருகில்
(பங்கு பெறுவோர்: குமார், செல்வம் மற்றும் ராஜா)
குமார்         : காசு பணம் துட்டு money money....காசு பணம் துட்டு money money (குமார்          பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கிறான்).
ராஜா          : குமாரு தம்பி குமாரு டேய் குமாரு டே.
குமார்         : காசு பணம் துட்டு money money...காசு பணம்...
ராஜா      : ஏம்பா செல்வம் இந்த குமாரு பையன் ஆட்டுப் பண்ணை வச்சாலும் வச்சான் அண்ணன் கூப்பிடுறது கூட தெரியாம ஆடிட்டே இருக்கான். அண்ணனுக்குன்னு ஒரு மரியாதையே இல்லையேடா.
செல்வம்    : அண்ணே அப்படிலாம் இல்லண்ணே. டேய் குமாரு அண்ணன் கூப்பிடறாருடா (சற்று அதட்டலாக).
குமார்        : அண்ணே மன்னிச்சுக்கண்ணே கவனிக்கல.
ராஜா          : சரி சரி காலைலேயே அண்ணனும் தம்பியும் எங்கடா கிளம்பிடீங்க?           
செல்வம்   : அண்ணே நேத்து குமாரு பையன,; மாட்டு டாக்டருகிட்ட ஆடுகளுக்கு ஏதோ மருந்துக் குளியல் பத்தி செயல்முறை விளக்கம் கத்துகிட்டு வந்திருக்கான்.  அதாண்ணே எங்க ஆடுங்களுக்கும் மருந்துக் குளியல் பண்ணலாம்னு போறோம்.
ராஜா          : குமாரு அதென்னடா ஆடுகளுக்கு மருந்துக் குளியல் அண்ணனுக்கு தெரியாம?
குமார்      : அண்ணே வீட்ல அண்ணி, நீங்கள்லாம் எதுக்குண்ணே தலைக்கு ஷாம்பூ, சீயக்காய் போட்டு குளிக்குறீங்க?
ராஜா            : தலைல பொடுகு பேண் எல்லாம் இல்லாம இருக்கிறதுக்குபா.
குமார்     : தலைல பேணு இந்தா என்னன்னே. அது ஒரு பக்கமா இருந்துட்டு போவட்டும்ணே.
ராஜா          : டேய் குமாரு தம்பி அண்ணன வச்சி காமடி கீமடி பண்ணலையே. அதுங்க நம்ம இரத்தத்தைலாம் உறிஞ்சிடும்பா. அப்புறம் அண்ணன் யுசஅள வத்திப்போய் ஒல்லிக்குச்சியா உன்ன மாரி ஆயிடுவன்டா.
குமார்         : அதேதான்னே. நம்ம ஆட்டுங்க மேல இருக்கிற பேணு, உண்ணி மாதிரி புற ஒட்டுண்ணியெல்லாம் ஆட்டோட இரத்தத்தை உறிஞ்சாம இருக்கிறதுக்குத் தான்னே மருந்துக் குளியல் பண்ண போறோம்.
ராஜா        : டேய் குமாரு நீ சான் பயன்னாலும் உடம்பெல்லாம் மூளடா. நீ கருப்புத் தங்கம்டா குமாரு.
குமார்             : அண்ணே எதுனா சொல்லுங்க. கலர பத்தி மட்டும் பேசாதீங்க.
ராஜா      :  சரி சரி விடுடா குமாரு. புற ஒட்டுண்ணிகளால ஆடுகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை பத்தி கொஞ்சம் விளக்கமா சொல்லுடா குமாரு
குமார்       : அண்ணே புற ஒட்டுண்ணிகளான பேண்கள், உண்ணிகள், தௌளுப் பூச்சிகள் மற்றும் சிரங்குப் பூச்சிகள் எல்லாம் ஆட்டோட தோளில் ஒட்டிக் கொண்டிருக்கும்ணே. அதுங்க எல்லாம் ஆட்டோட இரத்தத்தை உறிஞ்சி நம்ம ஆடுங்களோட வளர்ச்சியைக் குறைச்சிடும்ணே. புற ஒட்டுண்ணிகளாள பாதிக்கப்பட்ட ஆடுங்க எல்லாம் சரியா தீனி மேயாம உடல் மெலிந்து எலும்பும் தோலுமா இருக்கும். ஆட்டோட உரோமம் மற்றும் தோல் பகுதிகலெல்லாம் மிருதுவா இல்லாம சொர சொரன்னு விறைச்ச மாதிரி  இருக்கும்ணே. ஆடுங்களோட கண்களிலிருந்து தண்ணி வடிஞ்சிக்கொன்டே இருக்கும்ணே. நம்ம ஆடுங்களோட தொண்டைப் பகுதி, கண்களுக்கு கீழ் பகுதி, வாலின் அடிப்பகுதியில பார்த்தோம்னா புற ஒட்டுண்ணிங்க இருக்கும். 
          புற ஒட்டுண்ணிங்க ஆடுகளோட இரத்தத்தை எல்லாம் உறிஞ்சி இரத்தசோகை நோயை உண்டாக்கும்ணே. புற ஒட்டுண்ணிகளால பெபிசியோசிஸ், தைலிரியோசிஸ் மற்றும் அனபிளாஸ்மோசிஸ் போன்ற கொடிய நோய்கள் நம்ம ஆடுங்களுக்கு வரும்ணே. இந்த நோய்களால காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு எல்லாம் வரும். காய்ச்சல் கொஞ்சம் கொஞ்சமா அதிகமாகி 42 டிகிரி செல்சியஸ் வரைக்கும் ஆடுங்களுக்கு காய்ச்சல் வரும்ணே. 
            புற ஒட்டுண்ணிகளால ஆடுங்க உடல் எடை குறைவதோடு மட்டுமில்லாம, கடைசியா ஆடுங்க இறந்தும் போய்டும்னே. அதுமட்டுமில்லாம, ஆட்டோட தோல் பகுதியில காயத்தை ஏற்படுத்தி எரிச்சலை உண்டாக்கும்ணே. ஆடுங்க எரிச்சல் தாங்க முடியாம ஆட்டு கொட்டகையோட சுவர்ல உறஞ்சி காயத்தை அதிகப்படுத்திக்கும்ணே. இந்த காயங்களில் ஈக்கள் மேகட்ஸ் அப்படின்ற புழுக்களை வச்சிடும்ணே. 
     புற ஒட்டுண்ணிகளால பாதிக்கப்பட்ட ஆடுங்க ஒன்றோடொன்று உரசிக்கொள்ளும்போது, புற ஒட்டுண்ணிங்க ஒரு ஆட்டிலிருந்து மற்றொரு ஆட்டிற்கு பரவும். புதியதாக சந்தையில் இருந்து வாங்கி வரப்பட்ட ஆடுகள் மூலமாகவே புற ஒட்டுண்ணிகள் பரவும். அதனால புதியதாக வாங்கும் ஆடுகளில் புற ஒட்டுண்ணிகள் தாக்கம் உள்ளதா என நன்கு பார்த்த பின்னரே நம்ம ஆட்டோட சேக்கனும்ணே. இது போன்ற பாதிப்புகலெல்லாம் வராம தடுப்பதுக்குத்தான் நாங்க முன்கூட்டியே மருந்துக்குளியல் பண்ணலாம்னு போறோம்ணே.
ராஜா          : சரி குமாரு. நம்ம டாக்டரு ஆடுகளுக்கு எப்படி மருந்து குளியல் பண்ணினாரு?
குமார்         : அண்ணே 9 அடி நீளமும், 3 அடி அகலமும், மூணு அடி உயரமும் இருந்த மருந்து குளியல் தொட்டியில ஆடுகள குளிக்க வைச்சாங்க.  நம்ம மாதிரி சிறுகுறு விவசாயிகளெல்லாம் 2 அடி  அகலமும், 3 அடி நீளமும், 21ஃ2 அடி உயரமும் கொண்ட சிமெண்ட் தொட்டியையோ, இல்ல பிளாஸ்டிக் தொட்டியையோ பயன்படுத்தலாம்ணே..
ராஜா           : அதெல்லாம் சரிடா. மருந்துக் குளியல் கலவைய எப்படி தயார் பண்றது?
குமார்       : அண்ணே அமிட்ரஸ், சைபர்மெத்ரின், டெல்டாமெத்ரின், மாலத்தையான்னு நிறைய பேர்ல மருந்து இருக்குனே. ஓவ்வொரு மருந்தையும் ஒவ்வொரு அளவில தண்ணீர்ல கலந்து மருந்து கலவைய தயார் பண்ணனும்ணே. உதாரணமா ஓரு லிட்டர் தண்ணியில ரெண்டு மில்லி லிட்டர் பியூட்டாக்ஸ் மருந்தை கலந்து கலவைய தயாரிக்கலாம். மருந்து கலவைய தயாரிப்பதற்கு முன்னாடி மாட்டு டாக்டருகிட்ட கலந்து ஆலோசிக்கனும்ணே.
ராஜா          : ஏம்பா செல்வம் அண்ணனுக்கு மூச்சு வாங்குது. உனக்கு ஏதாவது சந்தேகம்னா கேளுப்பா?
செல்வம்      : சரிடா குமாரு. எந்த நேரத்தில குளிக்க வைக்கனும், எந்தெந்த ஆடுங்கள குளிக்க வைக்கனும்னு ஏதாவது டாக்டரு சொன்னாரா?
குமார்    : அண்ணே ஆடுகளை குளிக்க வைக்கும் முன் ஆட்டோட மேல சாணம் ஒட்டிக்கொண்டிருந்தால் அவைகளை நீக்கிடனும். அதுமட்டுமில்லாம முடிங்கலெல்லாம் ஒன்றோடு ஒன்று சேர்ந்து உருண்டை முடிச்சு மாதிரி இருந்தால் அவைகளை வெட்டிய பின்தான் குளிக்க வைக்கணும். ஆடுகளுக்கு மருந்துக் குளியல் செய்யுற அன்னைக்கு காலைல ஆடுகளுக்குத் தீவனம் கொடுக்கக் கூடாது.  ஆனால் நல்லா தண்ணீரை குடிக்க வச்சிடனும். அப்பொழுதுதான் ஆடுங்க மருந்து தண்ணிய குடிக்காதுங்க.  காலை 8 மணியிலருந்து 11 மணிக்குள்ள குளியல முடிச்சிடனும். அப்பதான் சாயங்காலத்துகுள்ள மருந்து தண்ணீ ஈரமில்லாமல் காயும். நன்கு வெயில் அடிக்கும் சமயத்தில் மருந்துக்குளியல் செய்ய வேண்டும்.
                              ஆடுகளை குளிக்க வைக்கும்போது ஆட்டோட வால் பகுதியை மருந்து நீரில நல்லா தாழ்த்தி தலைப்பகுதிய கொஞ்சம் உசத்தி குளிக்க வைக்கனும். ஏன்னா மருந்து தண்ணி ஆட்டோட மூக்கில ஏறிடக் கூடாது. சுமார் 1 நிமிசம் மருந்து தண்ணீர்ல ஆடுங்க இருக்கணும். ஆடுகளை தூக்கும் போது கழுத்துப் பகுதியல ஒரு கையும், தொடைப் பகுதியில ஒரு கையையும் வைச்சுதான் தூக்கணும்ணே. ஆட்டின் உரோமத்தை மட்டும் புடிச்சி தூக்கக் கூடாது
                        சினை ஆடுங்க, குட்டிங்க, நோயுற்ற ஆடுகளுக்கு மருந்து குளியல் வேண்டாம்.  அப்புறம் மழை காலத்திலேயும் வேண்டாம்னே. வருசத்திற்கு ரெண்டு முறை அதாவது ஏப்ரல்-மே மாதங்கள்ல ஒரு முறையும், ஜூலை முதல் செப்டம்பர் மாதங்கள்ல ஒரு முறையும் மருந்து குளியல பண்ணலாம்ணே. கடைசியா குளியல் முடிஞ்சதும் மருந்து குளியல் தொட்டியில் உள்ள மருந்து நீரை பத்திரமாக அப்புறப்படுத்தனும்ணே.
ராஜா           : அருமைடா குமாரு.
செல்வம்   : குமாரு, நம்ம பட்டி பக்கம் புல்லட் சத்தம் கேட்குது. மாட்டு டாக்டர்தான்னு நினைக்கிறேன். ராஜாண்ணே நீங்களும் வரிங்களா?
ராஜா           :  வாப்பா போவோம்.


(கால்நடைக் கதிர், மாத இதழ்,  2018)

Monday, June 10, 2019


நீல நாக்கு நோயும் ஏட்டிக்குப் போட்டி ஏகாம்பரமும்
(Bluetongue Disease in Sheep) 

ரா.கோபி, ந.விமல் ராஜ்குமார், பெரு.மதியழகன் மற்றும் பொ.திலகர்
கால்நடை விரிவாக்கக் கல்வித் துறை,
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி, சென்னை-7

காட்சி – 1
(பங்கு பெறுவோர்: முண்டாசு முனுசாமி, ரவுசு ராக்கம்மாள்,
ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்)

(முண்டாசு முனுசாமியும், ரவுசு ராக்கம்மாவும் தங்களுடைய ஆடுகள் மற்றும் குட்டிகளை ஓட்டிக்கொண்டு செல்கின்றனர். அப்பொழுது)

முண்டாசு முனுசாமி : கொஞ்சம் வேகமா நட தாயி, நாம சட்டு புட்டுன்னு மாட்டாஸ்பத்திரிக்குப் போவணும்.

ரவுசு ராக்கம்மா        : நடக்க முடியல மாமா கொஞ்சம் மெதுவா போலாம்.

முண்டாசு முனுசாமி : காலங்காத்தால கம்மஞ்சோற கொஞ்சம் குறைச்சலா குடின்னா கேட்கறியா தாயி.

ரவுசு ராக்கம்மா    : நான் என்னய சொல்லல மாமா, நம்ம ஆட்டுப் புள்ளைங்களால நடக்க முடியலன்னு சொன்னேன்.

முண்டாசு முனுசாமி   : ஓ! அப்படியா தாயி.

ரவுசு ராக்கம்மா     : நம்ம கண்ணாலம் ஆனதிலிருந்து நீ என்னைக்கு மாமா நான் சொன்னதை முழுசா கேட்டிருக்க….? சரி மாமா. நேத்து மாட்டாஸ்பத்திரிக்கு நம்ம செவலை குட்டி சாப்பிடலன்னு ஓட்டிட்டு போனியே அப்ப நம்ம டாக்டரு ஏதாச்சும் சொன்னாரா. இம்புட்டு வேகமா நடக்குறியே மாமா?

முண்டாசு முனுசாமி : ஆமா தாயி நம்ம செவலைப் பயலுக்கு இந்தக் கருப்பனுக்கு எல்லாம் நீல நாக்கு நோய் தடுப்பூசி போடனும் அப்படின்னு சொன்னாரு.

(அப்பொழுது ஏட்டிக்குப் போட்டி ஏகாம்பரம் இவர்களைப் பார்க்கிறார்)

ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம் : ஏம்பா முனுசாமி எங்க ரெண்டு பேரும் ஜோடியா கிளம்பிட்டீங்க?  என்ன சேதி? டவுன்ல சந்தைல ஆட்டெல்லாம் விக்கிறதுக்கு போறீங்களா?

ரவுசு ராக்கம்மா        : ஏகாம்பரண்ணே உன் வாயில கொள்ளி வைக்க! உன் கருநாக்குல நல்ல வார்த்தையே வராதா?

ஏ.போ. ஏகாம்பரம்   : சரி சரி விடுங்க.  ஏன் இவ்வளவு வேகமா போறீங்க? என்னாச்சு. இந்தக் காபி தண்ணிய நாக்குல ருசி பார்த்துட்டு போறது.

முண்டாசு முனுசாமி : இல்லப்பா ஏகாம்பரம்.  பேச ஆரம்பிச்சா நேரமாயிடும்.  மாட்டாஸ்பத்திரியில் நீல நாக்கு நோய்க்குத் தடுப்பூசி போடுறாங்களாம்.  அதான் எங்க ஆட்டு புள்ளைங்களுக்குத் தடுப்பூசி போடலாம்னு போய்ட்டிருக்கோம்.  ஏம்பா ஏகா நீயும் போன மாசம் சந்தையில ஆடு வாங்கினதான?

ஏ.போ. ஏகாம்பரம்      : ஆமா அந்த நோய் பேரு என்ன சொன்ன

முண்டாசு முனுசாமி    : நீல நாக்கு நோய்

ஏ.போ. ஏகாம்பரம்  : போப்பா முனுசாமி.  நாங்கல்லாம் கருநாக்குகாரங்க.  எங்க ஆட்டுக்கெல்லாம் எந்த கலரு நாக்கு நோயும் வராது.  போப்பா போ… போயி வேலையப் பாரு.

முண்டாசு முனுசாமி : ஏம்பா ஏகாம்பரம் எப்பபாரு ஏட்டிக்கு போட்டி பேசாம போய் கூட்டிக்கிட்டு வா போலாம்.

(முனுசாமியும், ராக்கம்மாவும் அங்கிருந்து மாட்டாஸ்பத்திரிக்குச் செல்ல தொடங்கினர்)

காட்சி – 2
இடம்: கால்நடை மருத்துவமனை
(பங்கு பெறுவோர்: கால்நடை மருத்துவர், முண்டாசு முனுசாமி, ரவுசு ராக்கம்மாள்)

மருத்துவர்            : ஏம்பா முண்டாசுக்காரரே நேற்று ஒரு செவலை குட்டி சரியா சாப்பிடலன்னு கொண்டு வந்தவர் தான நீங்க இப்ப நல்லா மேயுதப்பா.

முண்டாசு முனுசாமி : ஆமாங்கய்யா.  இப்ப நல்லா மேயுதுங்கய்யா.

மருத்துவர்                 : ஏம்பா உங்க பேரு என்ன?

முண்டாசு முனுசாமி : ஐயா என் பேரு முனுசாமி.  இது என் பொண்சாதி ராக்கம்மா.

மருத்துவர்             : நல்லதுப்பா.  3 மாதத்துக்கு மேல இருக்குற எல்லா ஆடுகளுக்கும் தடுப்பூசி போட்டுக்கப்பா.

முண்டாசு முனுசாமி: சரிங்கய்யா.  அதுக்கு முன்னாடி எனக்கு சில சந்தேகங்கள் இருக்குதய்யா.

மருத்துவர்                  : சரிப்பா.  ஒவ்வொரு சந்தேகமா கேளுப்பா.

முண்டாசு முனுசாமி : இந்த நோய்க்கு ஏன் சார் நீல நாக்கு நோய்னு பேரு?

மருத்துவர்                 : இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளோட நாக்கு எல்லாம் தடிச்சி நீல நிறமா மாறிடும்.  ஆதனால அந்த நோய்க்கு நீல நாக்கு நோய்னு பேரு. சுரி…அடுத்த என்ன சந்தேகம்?

முண்டாசு முனுசாமி  : இந்த நோய் எதனால வருதுங்கய்யா?

மருத்துவர்                : நீல நாக்கு நோயானது ஓரு நச்சுரியால வருதுப்பா.

ரவுசு ராக்கம்மா       : எனக்கு ஒன்னுமே புரியலைங்க ஐயா.  கண்ண கட்டி காட்டில உட்ட மாதிரி இருக்கு.  கொஞ்சம் எனக்கு புரியற மாதிரி சொல்லுங்க ஐயா.  நாங்கலாம பள்ளிக்கூடம் போகவதவங்கய்யா.

மருத்துவர்     : அப்படியாம்மா! சரிம்மா உனக்கு புரியற மாதிரி சொல்றேன் கேளு. “நீல நாக்கு நோயானது ஒரு நச்சுயிரியினால வருது.  இந்த நோய் வெள்ளாடுகளை விட செம்மறியாடுகளைத்தான் தீவிரமாக தாக்கும்.  நோய் வந்த ஆட்ட ‘கூலிகாய்ட்ஸ்’ கொசு கடிக்கும் போது, நோய் வந்த ஆட்டுல இருக்கிற நச்சு கிருமி, கொசு உடம்பிற்குள்ள போயிடும். அதுக்கப்புறமா அந்தக் கொசு, மத்த நல்லாயிருக்கிற ஆடுகளை கடிக்கும் போது அந்தக் கொசு மூலம் நீல நாக்கு நோய் அந்த ஆடுகளுக்குப் பரவும்”. சரியாம்மா புரியுதா?

ரவுசு ராக்கம்மா : புரியுதுங்கய்யா.  இன்னொரு சந்தேகம் இருக்குங்கய்யா.  நோய் வந்த ஆடு மற்ற ஆடுகளோடு மோதினால் இந்த நோய் பரவுமாங்கய்யா.

மருத்துவர்          : பரவாதும்மா. இந்த நோய் கிருமி தீவனம் மூலமாகவோ, ஆடுங்க ஒன்னுக்கொன்னு உரசுவது மூலமாகவோ பரவாது.  மழை காலத்துல இந்த வகை கொசு அதிகமாக உற்பத்தியாவதால அக்டோபர், நவம்பர்;    டிசம்பர் மாதங்கள்ல இந்த நோய்; ஆடுகளை அதிகமாக தாக்கும்.

முண்டாசு முனுசாமி : புரியுதுங்கய்யா.  அதனால தான் மழைக்காலத்துக்கு முன்னாடி இந்தத் தடுப்பூசிய போடுறாங்களா?

மருத்துவர்           : முனுசாமி, அருமையா சரியா சொன்னீங்க.  வேறென்ன சந்தேகம்?

முண்டாசு முனுசாமி:  நீல நாக்கு நோய் வந்தா எப்படிக் கண்டுபிடிக்கிறதுங்கய்யா?

மருத்துவர்        : இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஆடுகள்ல கடுமையான காய்ச்சல் இருக்கும்.  மூக்குல பார்த்தோம்னா தண்ணீர் மாறி சளி வடியும்.     ரெண்டு மூணு நாள்ல சளி கட்டியா இருகி மூக்குத் துவாரங்களை அடைச்சிரும்.  அப்புறம் ஆடுங்க மூச்சு விடவே சிரமப்படும். வாயோட உள்பகுதியில, நாக்குல, அப்புறம் ஈறுகள்லயும் புண்ணுங்க வரும் முனுசாமி. உதடு, காது கழுத்துப் பகுதயில வீக்கம் தெரியும். நாக்கு நீல நிறமா மாறிடும்.  கால் குளம்போட மேல்பகுதிங்க  சிவந்து இருக்கும். வலியும் இருப்பதால் ஆடுங்க நொண்டி, நொண்டி நடக்கும் முனுசாமி.  ஒரு சில ஆடுகளைப் பார்த்தோம்னா கழுத்து ஒரு பக்கமா இழுத்த மாதிரி இருக்கும். என்ன முனுசாமி? நீல நாக்கு நோய் வந்தால் ஆடுங்க எவ்வளவு கஷ்டபடுங்கன்னு புரியுதாப்பா?

முண்டாசு முனுசாமி : புரியுதுங்கய்யா.  மழைகாலத்துக்கு முன்னாடியே தடுப்பூசி போட்டுக்கிட்டா நீல நாக்கு நோய் வராதுங்களா ஐயா?

மருத்துவர்               : வராது முனுசாமி.  மூன்று மாச வயசுக்கு மேல் உள்ள ஆடுகளுக்கு தடுப்பூசி போடலாம்.  அதற்குப்புறம் வருசத்;துக்கு ஒரு முறை மழை காலத்திற்கு முன்ன தவறாம தடுப்பூசி போடணும்.

(முனுசாமியும், ராக்கம்மாவும் தங்களுடைய ஆடுகளுக்குத் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர்)

காட்சி – 3
இடம்: தேநீர் கடை (சில மாதங்களுக்குப் பிறகு)
(பங்கு பெறுவோர்: முண்டாசு முனுசாமி, குப்புசாமி )

முண்டாசு முனுசாமி  : என்னப்பா விவசாயிங்க எல்லோரும் எங்க கூட்டமா போறீங்க?

குப்புசாமி (கூட்டத்தல் ஒருவர்)  : அத ஏன்ணே கேக்குறீங்க.  நம்ம ஏகாம்பரம் ஆட்டு கொட்டாயில நிறைய ஆடுங்க இறந்து போச்சாம். அதான் என்னா ஏதுன்னு பார்க்கப் போறோம்.

காட்சி – 4
இடம்: ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம் கொட்டகை
(பங்கு பெறுவோர்: முண்டாசு முனுசாமி, ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்)

ஏ.போ.ஏகாம்பரம்    : அய்யோ முனுசாமி நீ சொன்னத கேட்கமா போயிட்டனே. என் ஆடுங்க எல்லாத்துக்கும் நீல நாக்கு நோய் வந்துடுச்சே.  உம் பேச்சை கேட்காம விட்டுட்டனே. தடுப்பூசி போடாம போயிட்டனே.

முண்டாசு முனுசாமி     : சரிப்பா சரி அழாத.  இப்ப அழுது எண்ணத்த ஆகப் போகுது.  டாக்டர கூப்பிடுவோம் வா.

காட்சி – 5
இடம்: முனுசாமி கொட்டகை
(ஆறு மாதங்களுக்குப் பிறகு – காலை நேரம்)
(பங்கு பெறுவோர்: முண்டாசு முனுசாமி, ஏட்டிக்குப்போட்டி ஏகாம்பரம்)

ஏ.போ.ஏகாம்பரம்  : என்னப்பா முனுசாமி.  இன்னும் நீல நாக்கு நோய்க்கு தடுப்பூசி போட போகலையா.

முண்டாசு முனுசாமி  : சரிப்பா ஏகாம்பரம்.  நீ போயி உன் ஆட்டைல்லாம் ஓட்டிக்கிட்டு வா.  மாட்டாஸ்பத்திரிக்கு போகலாம்.

ஏ.போ.ஏகாம்பரம்    : அட போப்பா. போயி வேலைய பாரு. நாங்கலாம் கருநாக்கு காரங்க.  காலைலேயே போயி நீல நாக்கு நோய்க்கு தடுப்பூசி போட்டுக்கிட்டு வந்துட்டுடேன்.

முண்டாசு முனுசாமி   : அடேங்கப்பா ஏகாம்பரம்.  எப்படியிருந்த நீ இப்படி மாறிட்டே.  சரிப்பா, இதா நானும் போறேன்.
-- சுபம் --


(கால்நடைக் கதிர், மாத இதழ்,  ஜூலை 2018, 38 (10))